டிடிவி தினகரனின் ஜோதிடா் சந்திர சேகரனுக்கு சம்மன் ; டிசம்பர் 20ஆம் தேதி நேரில் ஆஜராக வருமான வரித்துறையினா் சம்மனில் அறிவுறுத்தல்….

டிடிவி தினகரனின் ஜோதிடா் சந்திர சேகரை டிசம்பர் 20ஆம் தேதி நேரில் ஆஜராக வருமான வரித்துறையினா் சம்மன் அனுப்பியுள்ளனா்.

வி.கே.சசிகலா, டி.டி.வி.தினகரன் குடும்பத்தினர் மற்றும் அவர்களது உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்களில் வருமான வரி சோதனை கடந்த 9-ம் தேதி தொடங்கியது. ஜெயா டிவி, நமது எம்ஜி.ஆர் நாளிதழ், ஜாஸ் சினிமா அலுவலகங்கள், ஜெயா டிவி மேலாண் இயக்குநர் விவேக், இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா மற்றும் திவாகரன் வீடுகள் அலுவலகங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 187 இடங்களுக்கு சோதனை விரிவுபடுத்தப்பட்டது.

இந்நிலையில் சோதனையில் ஈடுபட்டுள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் டெல்லியில் உள்ள நேரடி வரி விதிப்பு ஆணையத்துக்கு 2 அறிக்கைகளை அனுப்பியுள்ளனர். அதில், இதுவரை ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 போலி நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களும், கணக்கில் வராத 15 கிலோ தங்கம், 5 கோடியே 50 லட்சம் ரூபாய் ரொக்கமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளதா என ஆய்வு செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி நிறுவனங்களில் வருவாய் வந்ததாக கணக்கு காட்டி 150 கோடி ரூபாய் மதிப்பிலான 40 அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் டெல்லிக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி நிறுவனங்கள் தொடர்பான 150 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது 50 நாள் அவகாசத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிக் கணக்குகள் மூலம் மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 3 நாட்களாக தொடா்ந்து வந்த வருமான வரித்துறையின் சோதனை முடிவில் டிடிவி தினகரனின் ஜோதிடா் சந்திர சேகரை வருகிற 20ம் தேதி நேரில் ஆஜராக வருமான வரித்துறையினா் சம்மன் அனுப்பியுள்ளனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *