டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.பி.க்களான விஜிலா சத்யானந்த், நவநீதகிருஷ்ணன், கோகுலகிருஷ்ணன் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அமைதிப் பேரணி நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.பி.க்களான விஜிலா சத்யானந்த், நவநீதகிருஷ்ணன், புதுச்சேரி எம்பி கோகுலகிருஷ்ணன் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்துப் பேசினர். சுமார் ஒரு மணி நேரம் வரை இந்த சந்திப்பு நடைபெற்றது. சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.