ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் காலத்தை மேலும் 6 மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பியதை அடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் ஆணையம் விசாரணையைத் தொடங்கி நடத்தி வருகிறது. இந்த ஆணையத்திடம் இதுவரை 120 பேர் புகார் மனு தாக்கல் செய்துள்ளனர். 28 பேர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். 15க்கும் மேற்பட்டோர் நேரடியாக ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு 15 நாட்களில் பதிலளிக்குமாறு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. விசாரணையை வரும் 2 ஆம் தேதி வரை தற்காலிகமாக ஆறுமுகசாமி ஆணையம் ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில் வரும் 25ம் தேதியுடன் ஆணையத்தின் காலம் முடிவடைவதால், மேலும் பலரை விசாரிக்க வசதியாக காலத்தை நீட்டிக்கக் கோரி, ஏற்கனவே தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது. அதன்படி தற்போது, ஆணையத்தின் காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, மற்றும் துணைத்தலைவர் ப்ரீத்தா ரெட்டி ஆகியோருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.