ஒக்கி புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வரும் 26ம் தேதி மத்தியக் குழு தமிழகம் வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அரபிக்கடலில் உருவான ‘ஒக்கி’ புயல் கடந்த 30ம் தேதி தமிழகத்தின் குமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளை கடுமையாக தாக்கியது. இதில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பலர் உயிரிழந்தனர். ஏராளமானோர் மாயமாகி உள்ளனர். இந்நிலையில் டெல்லியில் அமைச்சர் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கைச் சந்தித்து ஒக்கி புயல் பாதிப்பு குறித்த அறிக்கையை அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என ராஜ்நாத்சிங்கிடம் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார். புயல் நிவாரணத்துக்காக 8 ஆயிரத்து 426 கோடி ரூபாய் கேட்டுள்ளதாகவும், குமரி மாவட்டத்தில் மின்விநியோக சீரமைப்புக்கு 236 கோடி ரூபாய் கேட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் ஒக்கி புயல் பாதித்த இடங்களைப் பார்வையிட வரும் 26ம் தேதி மத்தியக் குழு தமிழகம் வருவதாகவும் அவர் தெரிவித்தார்.