ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மூர்த்தியின் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 19ம் தேதியன்று ஜம்மு காஷ்மீரில் உள்ள குரேஸ் பகுதியில் எல்லை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மூர்த்தி உயிரிழந்த செய்தி கேட்டு தான் வேதனையும் துயரமும் அடைந்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும் மூர்த்தியின் குடும்பத்திற்கு அனுதாபம் தெரிவித்துள்ள முதலமைச்சர், அவரது குடும்பத்திற்கு உடனடியாக இருபது லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இதேபோல் ஒகி புயலால் உயிரிழந்த கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஆன்றனி ராஜீன் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.