சேலத்திலிருந்து சென்னை வரையில் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 வழி சாலைத் திட்டம் ஒன்றை மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த முற்பட்டுள்ளன. இதனால் ஐந்து மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் விளை நிலங்களும் குடியிருப்புகளும் பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்படுபவர்களின் கருத்தை அறியாமலும், ஒப்புதலை பெறாமலும், பயமுறுத்தி பலவந்தப்படுத்தி நிலங்களைப் பறிப்பதற்கு தமிழக அரசு முயற்சிக்கிறது. மறுப்பு தெரிவிக்கும் மக்களை பொய் வழக்கு போட்டு கைது செய்கிறது. இந்த அடக்குமுறையைக் கண்டித்தும் நிலப்பறிப்பை எதிர்த்தும் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் தமது வீடுகளில் கறுப்புக் கொடியேற்றி அறவழியில் போராடுவதென்று முடிவு செய்துள்ளனர். ஜூன் 26ஆம் தேதி நடைபெறும் இந்த போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.
ஜனநாயக சக்திகளோடு இணைந்து பொதுமக்களின் இந்த நியாயமான அறப்போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.