சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில முறை இடியுடன் கூடிய கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களிலும், உள் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது.

இலங்கைக்கு தென்மேற்கே வங்க கடல் பகுதியில், வியாழக்கிழமை நிலைக்கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, சற்று நகர்ந்து, தற்போது, இலங்கைக்கும், தமிழக கடலோர பகுதிகளுக்கும் இடையே நிலை கொண்டிருப்பதாக, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை முதல் மிக அதிக கனமழை பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை மயிலாப்பூர் டிஜிபி அலுவலக பகுதியில், 30 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில், அநேக இடங்களிலும், உள் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும், ஓரிரு இடங்களில் மிக அதிக கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது. அடுத்து வரும் 2 நாட்களுக்கு இதே நிலை நீடிப்பதோடு, சென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில், இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வசிக்கும் மீனவர்கள், கடலுக்குள் செல்வதாக இருந்தால், மிகுந்த கவனமுடன் இருக்குமாறு, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *