சென்னை ஆர்.கே.நகரில் இணைந்த தோழமை கட்சிகளின் ஆதரவு தொடர வேண்டும்; திமுக பிரச்சாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு……

சென்னை ஆர்.கே.நகரில் இணைந்த தோழமை கட்சிகளின் ஆதரவு தொடர வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் திமுக வேட்பாளர் மருதுகணேசை ஆதரித்து சென்னை காசிமேட்டில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட அரசியல் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை மாண்புமிகு தமிழக முதல்வர் என அழைக்கும் காலம் விரைவில் வரும் என்று கூறினார். தமிழகத்தில் இப்போது ஆட்சி செய்வது ஆளுநரா, முதல்வரா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும், திராவிட கட்சிகளை வீழ்த்த வேண்டும் என்ற மதவாத சக்திகளின் எண்ணம் நிறைவேறாது என்றும் அவர் தெரிவித்தார்.

பின்னர் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர், இந்தியாவில் மதவாத சக்திகளை விரட்ட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளதாக கூறினார். மேலும் நாட்டை காப்பாற்ற ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவரானது போன்று, தமிழகத்தை காக்க மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஆர்.கே.நகரில் இணைந்த தோழமை கட்சிகளின் ஆதரவு தொடர வேண்டும் என மக்கள் விரும்புவதாக கூறினார். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை மூடி மறைத்ததில் முக்கிய பங்கு வகித்தவர்கள் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். என அவர் குற்றம்சாட்டினார். ஒகி புயலால் பாதித்த கன்னியாகுமரி மாவட்டத்தை முதலமைச்சர் பார்வையிடச் செல்லாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய மு.க.ஸ்டாலின், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்யும் நோக்கில் ஆளுங்கட்சி செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *