ஒகி புயலால் மாயாமான மீனவர்களை மீட்க கோரி கடலோர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
வங்கக்கடலில் உருவான ஒகி புயல் கடந்த 30ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்கியதில் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டது. கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்த குமரி மாவட்ட மீனவர்கள் ஏராளமானோர் மாயமாகினர். மாயமான மீனவர்கள் மீட்கக் கோரி நாகை, கடலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் மாயமான மீனவர்களை கண்டுபிடித்து தரக் கோரி கன்னியாகுமரி மாவட்டம் பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, இரவிபுத்தன்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்றும் போராட்டம் நீடித்து வருகிறது. இதனிடையே மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும், மாயமான மீனவர்களை மீட்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரியில் நாளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.