சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 21ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைதொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுவார் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை ஆட்சி மன்றக் குழு கூட்டம் கூடுகிறது. இக்கூட்டத்திற்கு பின் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிற அதிமுக வேட்பாளர் உறுதியாக வெற்றி பெறுவார் என்று தெரிவித்தார்.