அர்ச்சகருக்கு பயிற்சி பெற்றுள்ள 206 பேரை தமிழக அரசு உடனடியாக பணியமர்த்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை பெரியார் திடலில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை செயல்படுத்த வலியுறுத்தும் மாநாடு நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திமுக மாநிலங்களவை உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் இம்மாநாட்டில் பேசிய எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், கேரளாவில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமித்த அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் அர்ச்சகருக்கு பயிற்சி பெற்றுள்ள 206 பேரை தமிழக அரசு உடனடியாக பணியமர்த்த வேண்டும் என்று எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
பின்னர் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 4 தீர்மானங்களின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார்.