சென்னையில் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கியது. சுமார் 10 நாள் தொடர்ச்சியாக பெய்த மழை, கடந்த ஒருவார காலமாக ஓய்ந்து இருந்தது. இதனால் சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முதல் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. சென்னையில் கிண்டி, அசோக் நகர், வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நள்ளிரவில் கனமழை கொட்டித் தீர்த்தது. எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், ராயபுரம், மீனம்பாக்கம், ஆலந்தூர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவில் பரவலாக மழை பெய்தது. இதேபோல் திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை காணப்பட்டது.
மழை தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இணை இயக்குநர் ஸ்டெல்லா தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று தெரிவித்தார்.