அரசும், நீதித்துறையும் ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள் என்பதால், இணக்கத்துடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசன தினத்தையொட்டி டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அரசும், நீதித்துறையும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களுக்காக இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். நீதித்துறை, நாடாளுமன்றம், நிர்வாகம் என எந்த ஓர் அமைப்பின் முடிவும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்ற உணர்வோடு செயல்பட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டம் மிகவும் பலம் வாய்ந்ததாக திகழ்ந்து வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.