தமிழகத்தில் 1500 மெகாவாட் திறனுள்ள சூரிய மின்சக்தி நிலையங்கள் அமைக்க தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுடன் திறந்தவெளி ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டது. இதைத்தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்ட 16 நிறுவனங்களில் 4 நிறுவனங்கள் , முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. என்.எல்.சி. இந்தியா லிமிடெட், இராசி கிரீன் எர்த் எனர்ஜி பிரைவேட் லிமிடெட், நர்பேராம் விஸ்ராம் மற்றும் என்வீஆர் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் சூரிய சக்தி மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. மீதமுள்ள 12 சூரிய மின் உற்பத்தி நிறுவனங்கள் சூரியசக்தி மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் 30.9.2017-க்குள் கையெழுத்திடவுள்ளன. தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மின்துறை அமைச்சர் தங்கமணி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, தலைமைச்செயலகத்தில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் உள்ள தூதர் ராபர்ட் பர்கஸ் மற்றும் தூதரக அதிகாரிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.