தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரை அந்தந்த மாவட்டப் பிரிவுகளுக்கு திரும்ப உத்தரவிட்டது வழக்கமான நடவடிக்கைதான் என தமிழக டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக டிஜிபி அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விதமான சிறப்புக் காவல் படைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று இதன் மூலம் அறிவுறுத்தப்படுவதாக கூறப்பட்டிருந்தது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் உள்ள சிறப்புக் காவல் படைகள் உச்ச பட்ச தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவலானது மாநகர காவல்துறை ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் வழி அறிவுறுத்தப்படுகிறது என்றும். டிஜிபி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரை அந்தந்த மாவட்டப் பிரிவுகளுக்கு திரும்ப உத்தரவிட்டது வழக்கமான நடவடிக்கைதான் என தமிழக டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். சிறப்பு காவல் படையினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்டபணி முடிந்ததும் வழக்கமான பணிக்கு திரும்ப அறிவுறுத்துவது இயல்பான நடைமுறை என்றும்அவர் கூறினார்.