சரக்கு சேவை வரி விதிப்பு மூலம் ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 91 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ; மத்திய நிதியமைச்சகம் தகவல்

சரக்கு சேவை வரி விதிப்பு மூலம் ஆகஸ்ட் மாதத்தில் 90 ஆயிரத்து 669 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது ஜூலை மாத வருவாயை விட குறைவு என கூறப்படுகிறது.

நாட்டில் புழக்கத்தில் இருந்த பல்வேறு வரி விதிப்புகளுக்கு மாற்றாக சரக்கு மற்றும் சேவை வரி என்கிற ஒரே விதமான சட்டம் கொண்டு வரப்பட்டது. சேவை வரி, வாட் வரி, உற்பத்தி வரி உள்ளிட்ட பல வரிகள் நீக்கப்பட்டன. ஜூலை மாதம் இந்த வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்தது. முதல் மாதத்தில் இந்த வரியின் மூலம் அரசுக்கு 94 ஆயிரத்து 63 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.

இந்நிலையில் ஜி.எஸ்.டி. மூலம் ஆகஸ்ட் மாதத்தில் 90 ஆயிரத்து 669 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக நிதித்துறை தெரிவித்துள்ளது. இது ஜூலை மாத வருவாயைவிட குறைவாகும். இந்த வருவாயில், காம்போசிசன் வரி விதிப்பு திட்டத்தை தேர்வு செய்த 10.24 லட்சம் வரி செலுத்துநர்கள் செலுத்த வேண்டிய தொகை அடங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் ரிட்டன் தாக்கல் செய்யாதவர்கள் இன்னும் பலர் உள்ளனர். அவர்களும், வரி செலுத்தும்போது இந்த வருவாய் உயரும் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *