சென்னையில் பூர்விக குடிமக்களின் குடிசைகள் அகற்றப்படுவதை கண்டித்து, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சென்னை ஆயிரம்விளக்கு, திடீர்நகர் பகுதியில் சுமார் 70ஆண்டுகளாக வசித்து வரும் மக்களை நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக கூறி அவர்களது குடியிருப்புகளை முன்னறிவிப்பு இன்றி மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதேபோல், அண்ணாநகர் மண்டலத்துக்கு உட்பட்ட 107வது வார்டில் உள்ள கூவம் ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகளும் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் அகற்றப்பட்டது. மேலும் முத்துமாரியம்மன் கோயில் தெரு, எண்ணூர், ரங்கூன் தெரு, பூதப்பெருமாள் கோவில் தெரு, பல்லவன் நகர், எம்ஜிஆர் காலணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குடிசைகளை அகற்றவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த மக்கள் விரோத போக்கை கண்டித்து சென்னையில் டிசம்பர் 11ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.