ஒகி புயலின் போது மாயமான மீனவர்களை மீட்கக் கோரி கன்னியாகுமரியில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
கடந்த 30ம் தேதி வங்கக் கடலில் உருவான ஓகி புயல் கன்னியாகுமரி மாவட்தை பெரிதும் பாதித்தது. புயலின் போது கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகினர். காணாமல் போன மீனவர்களை மீட்டு தரக் கோரி பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் ஏராளாமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலின் போது கடலுக்கு மீன்பிடிக்க சென்று மாயமான மீனவர்களைக் கண்டுபிடித்துத் தரக்கோரி சின்னத்துறை கிராமத்தில் இன்று 3வது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நள்ளிரவிலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே ஓகி புயலில் உயிரிழந்த மீனவர்களுக்கு சின்னத்துறை, இரவிபுத்தன்துறை ஆகிய இரண்டு கிராமங்களைச் சேர்ந்த 4000 மீனவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். மேலும் மாயமான மீனவர்கள் திரும்பி வருவதற்கு கடற்கரையில் அமர்ந்து பொதுமக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஒக்கி புயலில் காணாமல் போன மீனவர்களை மீட்க கப்பல்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும் கடலில் இறந்து மிதக்கும் மீனவர்களின் உடல்களை மீட்டுக் கொண்டுவரவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் அவர் கூறினார்.