விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 25 நாட்களாக நடைபெற்று வந்த பட்டாசு ஆலை உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் திரும்ப பெறப்பட்டது.
சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும், பட்டாசு உற்பத்தி தடை தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விரைந்து விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25 நாட்களாக விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூடி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் அளிக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். இதனையடுத்து அமைச்சரின் வாக்குறுதியை ஏற்று, வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக ஆலை உரிமையாளர்கள் அறிவித்தனர். வரும் திங்கள் கிழமை முதல் பட்டாசு ஆலைகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.