சசிகலா உறவினர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் 5 நாட்களாக நடைபெற்ற வருமானவரி சோதனை முழுமையாக நிறைவு; ஜெயா டிவி சிஇஓ விவேக்கிடம் தொடர்ச்சியாக 5 மணி நேரம் விசாரணை

சசிகலா உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரி சோதனை முழுமையாக நிறைவு பெற்றுள்ளது.

வி.கே. சசிகலா குடும்பத்தினர் வசம் இருக்கும் ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் உள்ளிட்ட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் இல்லம், ஜெயா டி.வி இயக்குநர் விவேக் இல்லம், மன்னார்குடியில் உள்ள சசிகலாவின் உறவினர்கள் இல்லம் என சோதனை நடைபெறும் இடங்கள் நீண்டு கொண்டே போயின. சசிகலாவின் உறவினர்கள் மட்டுமல்லாது முக்கிய ஆதரவாளர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களிலும் சோதனை நடந்தது. சுமார் 1800 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அனைத்து சோதனைகளும் நேற்றுடன் முடிவடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சோதனையின் போது சிக்கிய ஆவணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், திவாகரன் உள்ளிடோருக்கு சம்மன் அனுப்பி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேற்று மாலை முதல் ஜெயா டிவி சிஇஓ விவேக்கிடம் 5 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *