கேரளாவில் வரலாறு காணாத மழையால் அம்மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. துயரத்தில் இருந்து மீளாத அம்மாநில மக்களுக்கு பல்வேறு மாநிலங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் உட்பட பல தரப்பு மக்களிடம் இருந்து உதவிகள் குவிக்கின்றனர். மழையால் கேரளாவில் சுமார் ₹20 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சேதங்கள் ஏற்படுள்ளதாக கூறப்படுகிறது. 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகள், உடமைகளை இழந்து தவிக்கின்றனர்.தற்போது மழைக் குறைந்துள்ள நிலையில் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த 14ம் தேதி முதல் கேரளாவில் பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரிலையன்ஸ் பவுண்டேஷன் சார்பில் பலகட்டமாக ஏராளமான நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில், ரிலையன்ஸ் ரீடெயில் கடைகள் சார்பில் 160 அரசு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், சுமார் 2.6 மெட்ரிக் டன் அளவிளான நிவாரண பொருட்கள் கேரள மக்களுக்கு வழங்க மகராஷ்டிரா மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் ₹50 கோடி மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர, கேரள முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்கு ₹21 கோடி ரிலையன் பவுண்டேஷன் சார்பில் வழங்கப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் பவுண்டேஷன் தலைவர் நீட்டா அம்பானி தெரிவித்துள்ளார்.