கெயில் திட்டத்தை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகள் முயற்சித்தால், ஏழு மாவட்ட விவசாயிகளுடன் இணைந்து திமுக போராடும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் உள்ள விளைநிலங்களின் ஊடாக கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய்களைப் பதிக்க, மீண்டும் மத்தியில் உள்ள பாஜக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்வதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்ட விளைநிலங்களின் வழியாக 310 கி.மீ. தூரத்துக்கு எரிவாயுக் குழாய்கள் பதிப்பது விவசாயிகளின் எதிர்காலத்தை நசுக்கும் ஆபத்தான திட்டம் என்று அவர் எச்சரித்துள்ளார். மேற்கு மண்டலத்தில் உள்ள ஏழு மாவட்டங்களையும் பேரிடருக்கு உள்ளாக்கும் இந்த கெயில் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் கொதித்தெழுந்து உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். துப்பாக்கி குண்டுகளுக்கும் அஞ்சாமல் எங்கள் விளைநிலங்களைப் பாதுகாப்போம் என்ற விவசாயிகளின் ஆவேசக் குரலை மத்திய அரசு உதாசீனப்படுத்தக்கூடாது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகம் சார்ந்த பல்வேறு பிரச்னைகளில் தமிழகத்தின் உரிமைகளை கோட்டைவிட்ட குதிரை பேர அதிமுக அரசு, கெயில் திட்ட விவகாரத்திலும் கோட்டை விட்டு குறட்டை விட்டுத் தூங்கக் கூடாது என்று மு..க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *