மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், கும்பகோணம் அரசலாற்றில் பொதுமக்களே சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர் வாரினர். மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் கடைமடை வரை தண்ணீர் சென்று சேர்வதற்காக சில இடங்களில் உள்ள ஆறுகள், வாய்க்கால்களை அரசே தூர் வாரியுள்ளது.
ஆனால் இன்னும் பல இடங்களில் ஆறுகள், வாய்க்கால்கள் தூர் வாரப்படவில்லை. இந்நிலையில் கும்பகோணத்தில் துவரங்குறிச்சி பெரியார் நகரில் வசிக்கும் நெசவாளர்கள் தாங்களாகவே முன் வந்து சுமார் 2 லட்ச ரூபாய் வசூலித்து அருகில் உள்ள அரசாலாற்றை பொக்லைன் மூலம் தூர் வாரினர். இதற்காக நெசவாளர்கள் ஏற்படுத்தியுள்ள நற்பணி மன்றத்தினர் பொதுப்பணித்துறையினரிடம் உரிய அனுமதி பெற்று இந்த பணியை மேற்கொண்டுள்ளனர்.