குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்காமல் தடுக்கப்படும்; சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை…

புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தின் போது குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கும், பைக் ரேசில் ஈடுபடுபவர்களுக்கும் பாஸ்போர்ட் கிடைக்காமல் தடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பல்வேறு வாகன விபத்துகளில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு அத்தகைய உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில், சென்னை மாநகர காவல்துறை பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி வரும் 31 ம் தேதி, இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை, மெரினா கடற்கரையை ஒட்டிய சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேப்பியர் பாலம் முதல், சாந்தோம் கச்சேரி சாலை சந்திப்புவரை வாகனங்கள் செல்லவும், மெரினா கடற்கரையின் சர்வீஸ் சாலையில் வாகனங்கள் நிறுத்தவும் தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரைக்கு வருவோர், விக்டோரியா விடுதி, வெலிங்டன் பள்ளி, ராணிமேரி கல்லூரி, மாநிலக் கல்லூரி உள்ளிட்ட 8 இடங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31ஆம் தேதி இரவு குடிபோதையில் வாகனம் ஓட்டினாலோ, பைக் ரேசியில் ஈடுபட்டாலோ, அவர்களுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது தடையில்லாச் சான்று வழங்கப்படாது எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனது. புத்தாண்டை ஒட்டி சென்னை மாநகர் முழுவதும் 176 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும் என்றும், 3 ஆயிரத்து 500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *