கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே திருநங்கைகள் தள்லி விட்டதில் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில், தேடப்பட்ட திருநங்கை ஸ்வேதா கைது செய்யப்பட்டார்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சத்தியநாராயணா, காரம் வீரம்பாபு ஆகியோர் திருப்பூரில் பொகாரோ எக்ஸ்பிரஸ் ரயிலில் படிக்கட்டு அருகே அமர்ந்து பயணம் செய்தனர். ரயில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது ரயிலில் சில திருநங்கைகள் பணம் கேட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது பணம் தராததால் சத்தியநாராயணாவை ஒரு திருநங்கை தள்ளி விட்டதில் அவர் கீழே விழுந்து உயிரிழந்தார். அவரது நண்பரும் காயமடைந்தார். இதுகுறித்து ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த திருநங்கை ஸ்வேதா, சத்தியநாரயணாவை எட்டி உதைத்தது தெரியவந்தது. அவர்மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த போலீசார், ஸ்வேதாவை தேடி வந்தனர். போலீசார் தன்னைத் தேடுவதையறிந்த திருநங்கை ஸ்வேதா, எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் திருப்பத்தூர் வந்தடைந்த சேலம் ரயில்வே போலீஸார் சுவேதாவை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *