காலா படத்துக்கு தடைகோரிய வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உரிமையியல் நீதிமன்றம், காப்புரிமை தொடர்பான வழக்கு என்பதால் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கரிகாலன் என்ற அடைமொழியுடன் காலா படத்தை எடுப்பதற்கு தடை விதிக்கக் கோரியும், அந்த படத்தின் கதை தன்னுடையது என உரிமை கோரியும் ராஜசேகரன் என்பவர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நடிகர் ரஜினிகாந்த், படத்தின் இயக்குனர் ரஞ்சித், வொண்டர்பார் பிலிம்ஸ் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் காலா படத்தின் கதை யாரிடமிருந்தும் திருடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. மனுதாரரை ரஜினிக்கு தெரியாது எனவும், மனுதாரர் அவரை சந்தித்ததாக கூறும் காலகட்டத்தில் நடிகர் ரஜினியை பலர் சந்தித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு விளம்பர நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளதால் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பதில் மனுவில் கூறியிருந்தனர். இதையடுத்து மனுதாரர், நடிகர் ரஜினியை சந்தித்தது தொடர்பான புகைப்படங்களை ஆதாரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் ரஜினி, ரஞ்சித், வொண்டர்பார் பிலிம்ஸ் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மனுதாரர் இந்த வழக்கை காப்புரிமை சட்டத்தின் கீழ் தொடர்ந்துள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது என்பதால் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டது. நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் காலாவுக்கு எதிரான இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காப்புரிமை சட்டத்தின் கீழ் உயர்நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடர முடியும் எனக் கூறி நீதிபதி இளங்கோவன் மனுவை தள்ளுபடி செய்தார். மனுதாரர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி உரிய நிவாரணம் பெற்றுக் கொள்ளுமாறும் நீதிபதி அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *