கல்லூரிகளில் முதல்வர்களின் பதவிக்காலம் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இருக்க வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக் குழு அறிவித்துள்ளது.
உயர்கல்வி-யில் தரத்தை காப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த விதிமுறைகளை பல்கலைக் கழக மானியக் குழு வகுத்துள்ளது. இதுதொடர்பான அரசிதழிலும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் முதல்வர்களுக்கு இதுவரை பதவிக்காலம் இல்லாத நிலையில், இனிமேல், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பதவியில் இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் செயல்பாடுகள் குறித்து குறிப்பிட்ட பல்கலைக் கழகங்களால் நியமிக்கப்படும் குழு செய்யும் மதிப்பீடு அடிப்படையில், பதவிக்காலத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம் என்றும் கல்லூரி முதல்வர்கள் இனிமேல், துணைப் பேராசிரியர் அந்தஸ்தில் இல்லாமல், பேராசிரியர் அந்தஸ்தில் இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதல்வர் பதவிக்கு வருபவர்கள், பிஎச்டி முடித்திருப்பதுடன், உயர்கல்வி நிறுவனங்களில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, கல்லூரிகளின் துணை முதல்வராக முதுநிலையில் உள்ள ஆசிரியரை, இரண்டு ஆண்டுகளுக்கு கல்லூரிகளின் ஆட்சிமன்றக் குழு நியமிக்கலாம் என்றும் பல்கலைக் கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
இதில் உதவிப் பேராசிரியர், துணைப் பேராசிரியர், பேராசிரியர் ஆகிய பதவிகளுடன், முதுநிலை பேராசிரியரை பல்கலைக் கழகங்கள் நேரடியாக நியமனம் செய்துகொள்ளலாம் என்றும் பல்கலைக் கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.