கட்டிடம், சிற்பம் என கலைகளில் இன்றளவும் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் நடைபெற்ற 32வது பொறியாளர்கள் மாநாட்டில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் மாமல்லபுரத்தில் உள்ள சோழர் மற்றும் பல்லவர் கால சிற்பங்கள் இன்றளவும் கலைகளில் சிறந்து விளங்குவதாக தெரிவித்தார். மேலும் அண்ணா, காமராசர், கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தமிழக மரபுகளை கட்டிக்காத்து பெருமை சேர்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் பிறந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த அப்துல் கலாமை அனைவரும் முன்னுதாரணமாக எடுத்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பொறியாளர்களுக்கு உகந்த வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனைதொடர்ந்து ஆளுநர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். பின்னர் அங்கு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் மற்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.