கன்னியாகுமரி மாவட்டத்தின் குழித்துறை ரெயில் நிலையத்தில் நடைபெற்று வந்த தமிழக மீனவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகினர். இதையடுத்து மாயமான மீனவர்களை மீட்டுத் தர வேண்டும் என மீனவ அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு கேரள அரசு 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்குவது போல் தமிழக அரசும் வழங்க வேண்டும், என வலியுறுத்தி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த இரயுமன் துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, புத்தன் துறை, வள்ளவிளை, மார்த்தாண்டம் துறை, நீரோடி ஆகிய 8 மீனவ கிராம மக்களும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சின்னத்துறையில் இருந்து மார்த்தாண்டத்தை அடுத்த குழித்துறை நோக்கி நடை பயணம் தொடங்கினர். நித்திரவிளை, நடைகாவு, புதுக்கடை வழியாக குழித்துறை சென்று அங்கு ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி வழியாக செல்ல கூடிய ரெயில்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. 12 மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்ற தமிழக மீனவர்களின் ரெயில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. மீனவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த தமிழக முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தை அடுத்து மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் 12 மணிநேரத்திற்கும் மேலாக தடைபட்டிருந்த ரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது.