காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து அதனை சுற்றி உள்ள 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த 8 நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக குடியிருப்புப்பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள ஏரி முழு கொள்ளளவை எட்டி 23.3 அடியில் நீர் உள்ளது. இதன் காரணமாக அணையிலிருந்து உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் கிளியாற்றின் வழியாக திறந்து விடப்பட்டு வருவதால் ஆற்றின் கரையோரத்தில் உள்ள 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது கனமழை ஏதும் இல்லாத காரணத்தாலும், ஏரிக்கு நீர் வரத்து குறைவாகவே உள்ளதாலும் அபாயம் ஏதுமில்லை என கூறப்படுகிறது. அணையின் அருகே யாரும் செல்ல வேண்டாம் எனவும், புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது.