கந்துவட்டியை தடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து, கந்துவட்டி கொடுமையால், தனது குடும்பத்தினருடன் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டார். இதில், இசக்கிமுத்துவின் மனைவி மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இசக்கிமுத்துவை நேரில் சந்தித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 47 பேர் கந்து வட்டி கொடுமையால் உயிரிழந்துள்ளதாகவும், இந்த விஷயத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கட்சித் தலைவர் பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, அவதூறு பரப்புகிற நடவடிக்கையில் தமிழிசை சவுந்தரராஜன் ஈடுபட்டிருப்பது கவலை அளிப்பதாக எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.