ஒகி புயல் பாதிப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒகி புயல் நிவாரண பணிகளில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், புயலால் பாதிப்பிற்குள்ளான தமிழகத்திற்கு மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளர்களை, தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்களாக தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், இடைத்தேர்தல் நிறுத்தப்பட கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.