சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பல்வேறு அரசியல் கட்சியினரும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி அந்தத் தொகுதியில் அரசியல் கட்சியினரும் , அவர்களின் ஆதரவாளர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்குச் சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக வேட்பாளர் மருது கணேசை ஆதரித்து திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். ஆர்.கே. நகர் தொகுதி காசிமேட்டில் அவர் தமது பிரச்சாரத்தை மேற்கொண்டார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.
சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் டிடிவி தினகரன் தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, இரட்டைக்குழித் தெரு, கொருக்குப்பேட்டை ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவினர் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.
இதேபோல், அதிமுக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.