ஒகி புயல் பாதித்த கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்; ஆட்சியர் அலுவலகத்தில் 5 எம்.எல்.ஏக்கள் உள்ளிருப்பு போராட்டம்….

ஒகி புயல் பாதித்த கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5 எம்எல்ஏக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள், மழைநீரில் சேதம் அடைந்தன. விளை நிலங்களிலும் வெள்ளம் புகுந்தது. வீடுகளுக்குள்ளும் மழை நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் அந்த மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுவரை அதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும், புயலின் போது கடலுக்கு சென்று கரை திரும்பாத மீனவர்களை மீட்க வேண்டும், புயலால் பாதிக்கப்பட்ட ரப்பர், வாழை தோட்டங்களுக்கு உற்பத்திக்கு ஏற்ப நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அம்மாவட்டத்தை சேர்ந்த கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜன், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், பத்மநாபாபுரம் சட்டமன்ற உறிப்பினர் மனோ தங்கராஜ், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் ஆகிய 5 எம்.எல்.ஏக்கள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *