ஒகி புயல் குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறையின் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பிபின் மாலிக் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் இன்று கன்னியாகுமரியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
கடந்த 30-ம் தேதி ஒகி புயல் தாக்கியதில் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புயல் காற்று வீசியதில் கடலுக்கு சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் மாயமானார்கள். அவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று வரை கரை திரும்பவில்லை. மாயமான மீனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஒகி புயலால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் லட்சக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் உடைந்தன. பல நூறு ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கிய் பாதிப்புக்குள்ளானது. இதனால் குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென்று அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஒகி புயல் குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறையின் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பிபின் மாலிக் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் இன்று கன்னியாகுமரியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒகி புயல் பாதிப்புக்கு 133 கோடி ரூபாய் இடைக்கால நிதியுதவியாக ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது .மேலும், மத்திய குழு ஆய்வு நடத்தி அறிக்கை சமர்பித்த பின்னர், அதன் அடிப்படையில் மேலும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே டிசம்பர் 15ம் தேதி வரை ஓகி புயலால் 400 மீனவர்கள் மாயமாகி உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.