பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த வி.கே.சசிகலா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடராஜனை இன்று பார்க்க செல்வார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டதால் கைது செய்யப்பட்ட வி.கே.சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், உடல்நலம் பாதித்த தனது கணவர் நடராஜனை பார்க்க அவருக்கு 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதனால், 7 மாத சிறைவாசத்துக்குப் பிறகு சசிகலா நேற்று வெளியே வந்தார். அவரை டிடிவிதினகரன் மற்றும் உறவினர்கள் கார் மூலம் சென்னை அழைத்து வந்தனர். சென்னை தியாகராயநகரில் உள்ள உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியாவின் வீட்டில் சசிகலா தங்கியுள்ளார்.
பரோலில் வெளியே வந்துள்ள சசிகலாவிற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரே இடத்தில் தங்கியிருக்க வேண்டும், அரசியல் ரீதியாக எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது, வீடு, மருத்துவமனை தவிர வேறு இடங்களுக்கு செல்லக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மருத்துவமனையில் இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் மிக அவசியமான சூழல் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் தகவல் தந்துவிட்டு செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களை சந்தித்து எந்த கருத்துகளையும் தெரிவிக்கக்கூடாது என்றும் பொது மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடாது என்றும் கர்நாடக சிறைத்துறை நிபந்தனை தெரிவித்துள்ளது. தாமாகவே எந்த அரசியல்வாதியையும் அழைத்து சந்திக்கக்கூடாது என்றும் வீட்டுக்கு வருபவர்களை சந்திக்க தடையில்லை என்வும் கூறப்பட்டுள்ளது. கட்சி தொண்டர்கள் கூட்டத்தை கூட்டி சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என நிபந்தனை விதித்துள்ள கர்நாடக சிறைத்துறை ,சென்னையில் வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் இருப்பதால் சாட்சிகளை கலைக்கும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனை இன்று காலை 11 மணிக்கு வி.கே.சசிகலா பார்க்கச் செல்கிறார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.