எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டங்களை மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களாக அரசு கருத வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை பகுதியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்ட புரட்சியாளர் அம்பேத்கரின் வெண்கல சிலையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் திறந்து வைத்தார். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் சிறப்புரையாற்றினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பேருந்து கட்டண குறைப்பு கண் துடைப்பு நாடகம் என்று குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டங்களை மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களாக அரசு கருத வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதித்த காஞ்சிபுரம் இளைய மடாதிபதி விஜயேந்திரர் பொதுமக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறிய அவர், மதவாத சக்திகள் கவிஞர் வைரமுத்துவுக்கு வேண்டுமென்றே நெருக்கடி கொடுத்து வருவதாகவும் கூறினார்.
மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ளவர்களை விடுதலைச் செய்ய வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.