ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில், குரோஷியா அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி கோப்பையை தட்டிச்சென்றது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தொடங்கிய இறுதிப்போட்டியில் குரோஷியா, பிரான்ஸ் அணிகள் விளையாடின. அனல்பறந்த ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் அடித்த பந்து, குரோஷியா வீரரின் தலையில் பட்டு ‘செம்சைட்’ கோலாக மாறியது.
பதில்கோல் அடிக்க குரோஷிய வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினர். 28வது நிமிடத்தில் குரேஷிய வீரர் அட்டகாசமாக கோல் அடித்து அசத்தினார்.
38வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பிரான்ஸ் அணி சரியாக பயன்படுத்திக்கொண்டது. முதல் பாதி முடிவில் 2க்கு 1 கோல் கணக்கில் பிரான்ஸ் முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியில், 59, 65வது நிமிடங்களில் பிரான்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து கோல்கள் அடித்து, குரோஷியா வீரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.
கடுமையாக போராடிய குரோஷியா வீரர்கள் 69வது நிமிடத்தில் இரண்டாவது கோல் அடித்தனர். ஆட்டநேர முடிவில் நான்கிற்கு இரண்டு என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று, கால்பந்து உலகக் கோப்பையை இரண்டாவது முறையாக கைப்பற்றியது.
பாரிஸ் நகரில் குவிந்த லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆடிப்பாடியும், வாணவேடிக்கைகளை நிகழ்த்தியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.