திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலையை மீட்ட போலீசார், அது தொடர்பாக 4 பேரையும் கைது செய்துள்ளனர். ஆரணி அருகே கண்ணமங்கலம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீசார், சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, சக்திவேல், சிம்பு ஆகியோர் கொடுத்த 18 அங்குல உயரமுடைய சிலை தங்களிடம் இருப்பதாகவும், அதை விற்பதற்கு முயற்சித்து வருவதாக இருவரும் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, வீடு ஒன்றில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 3 கிலோ ஐம்பொன் சிலையை மீட்ட போலீசார், அதை வைத்திருந்த கோகுலன், அரிராஜா, திருமலை உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். மேலும் சிலையை கொடுத்ததாக கூறப்படும் சக்திவேல், சிம்பு ஆகியோரையும் போலீசார் தேடி வருகின்றனர்.