ஈ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது, தேர்தல் ஆணையம்; சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக டிடிவி தினகரன் அறிவிப்பு….

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி – துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கீடு செய்து, தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில், தேர்தல் ஆணைய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இரட்டை இலை சின்னத்தை இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணிக்கு ஒதுக்கிய தலைமை தேர்தல் ஆணையம், அதிமுகவின் பெயரை, வழக்கம்போல் பயன்படுத்தலாம் என்று கூறியது. இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டங்கள் களைகட்டின. கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களோடு ஆலோசனை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இரட்டை இலைச் சின்னத்தை கைப்பற்றி, ஆட்சியை கலைக்க நினைத்தவர்களுக்கு, தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு சம்மட்டி அடி போல் அமைந்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் , அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்று மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனிடையே சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடந்து கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *