இளைஞர்களால் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்க முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குடியரசு தின கொண்டாட்டத்தில் டெல்லியில் ராஜபாதையில் நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற என்.சி.சி., என்.எஸ்.எஸ்.சை சேர்ந்தவர்களை, பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். அவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், படை வீரர்களை எண்ணி நாடு மிகுந்த பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார். இளைஞர்களால் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்க முடியும் என்றும் அவர் கூறினார். காவல்துறையினர் பலர் நாட்டுக்காக உயிர்நீத்துள்ளதாக சுட்டிக்காட்டிய மோடி, அத்தகை நபர்களின் தியாகத்தையும், வீர உணர்வையும் இளைஞர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். தூய்மை பாரதம் என்பது மகாத்மா காந்தியின் கனவு என்று குறிப்பிட்ட பிரதமர், அந்தக் கனவு நிறைவேறி வருவதாகவும் பெருமையுடன் கூறினார். இந்திய குடியரசு தின கொண்டாட்டத்தில் 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றது தேசத்திற்கே பெருமை என்றும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.