இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை பிப்ரவரி 8ம் தேதி வரை சிறையில் அடைக்க தலைமன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 28ம் தேதி நெடுந்தீவு அருகே 2 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12பேரை இலங்கை கடற்படையினர் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்துள்ளனர். மேலும் சிறைப்பிடிக்கப்பட்ட 12 மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 12 பேரையும் இலங்கை கடற்படை தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இதனை தொடர்ந்து 12பேரையும் பிப்ரவரி 8ம் தேதி வரை வவுனியா சிறையில் அடைக்க தலைமன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை அடுத்து 12 மீனவர்களும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.