நாடாளுமன்ற கூட்டத்தொடர் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் உரையுடன் இன்று தொடங்குகிறது.
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். இதனை தொடர்ந்து இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வு அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. அதன்பின் பிப்ரவரி 1ம் தேதி மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கடைசி முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்கிறார். 2019ம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்பாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முழுமையாக தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இது என்பதால், அனைத்து தரப்பினரையும் கவரும் விதமாக பல்வேறு சலுகைகள், திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இன்று தொடங்கும் கூட்டத்தொடர் பிப்ரவரி 9ம் தேதி முடிவடைகிறது. பின்னர் 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 5ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.