இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் நேற்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்தனர். காங்கிரஸ் சார்பில், வீரபத்ர சிங் மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பா.ஜ.க. சார்பில் பிரேம்குமார் துமால் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ், பா.ஜ.க. அனைத்து தொகுதிகளிலும் தங்களது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 42 தொகுதிகளில் போட்டியிட்டது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மொத்தம் 74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் 18-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.