இந்திய விமானப்படைக்கு 21 ஆயிரத்து 783 கோடி ரூபாய் செலவில் 111 அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்திய ராணுவத்துக்கு தேவையான கணிசமான ஆயுதங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. சமீபத்தில் மாநாடு ஒன்றில் பேசிய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராணுவத்தை நவீனப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் ராணுவத்தின் போர்திறனை மேம்படுத்துவதற்கு இடையூறாக உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில், இந்திய விமானப்படைக்கு 21 ஆயிரத்து 783 கோடி ரூபாய் செலவில் 111 அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்க ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்துள்ளார். இவற்றில் 16 ஹெலிகாப்டர்கள் வெளிநாட்டில் இருந்து கொள்முதல் செய்யப்படும் என்றும் 95 ஹெலிகாப்டர்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வெளிநாட்டு ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனம் மற்றும் உள்நாட்டில் உள்ள ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.