தமிழகத்தில் ஆளுநர் ஆய்வு செய்வதை ஆதரிக்கும் அமைச்சர்கள், இந்திய அரசியலமைப்பு சட்டம் தங்களுக்கு வழங்கிய அதிகாரம் குறித்து யோசித்து செயல்பட வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ரெங்கநாதர் கோயிலில் நேற்றிரவு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்றும் டெல்லியைப் போன்று அல்ல என்றும் கூறினார். மேலும் டெல்லி தலைநகரில் இருப்பதால் நிதி, நிலம், நிர்வாகம் ஆகியவற்றில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு உரிமை உண்டு என்று கூறிய அவர் புதுச்சேரியை பொறுத்தவரை சட்டப்பேரவைக்கு மட்டுமே உரிமை உண்டு என்று குறிப்பிட்டார். தமிழகத்தில் ஆளுநர் ஆய்வு செய்வதை ஆதரிக்கும் அமைச்சர்கள், இந்திய அரசியலமைப்பு சட்டம் தங்களுக்கு வழங்கிய அதிகாரம் குறித்து யோசித்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் அனைத்து அகில இந்திய பொறுப்பாளர்களின் விருப்பமும், புதுச்சேரி முதலமைச்சரான தமது விருப்பமும் ராகுல் தலைவராக வேண்டும் என்பதே என்று தெரிவித்தார்.