நிலவின் மீது படவேண்டிய சூரிய ஒளியை பூமி குறுக்கே வந்து மறைத்துக் கொள்ளும் போது சூரியன், பூமி, நிலவு மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருவதுதான் சந்திரகிரகணம். இந்நிலையில், இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேரம் கொண்ட அரிய கிரகணம் நேற்று இரவு இந்தியாவில் தெளிவாக நன்றாகத் தெரிந்தது.
நள்ளிரவு 11.54 மணிக்குத் தொடங்கிய சந்திர கிரகணம் இன்று அதிகாலை 2.43 மணி வரை நீடித்தது. சென்னை பிர்லா கோளரங்கத்தில் சந்திரகிரகணத்தைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
வடமாநிலங்களில் பல்வேறு நகரங்களில் சந்திர கிரகணத்தை பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.
சந்திரகிரகணத்தை வெறும் கண்ணால் பார்ப்பதில் எந்த ஆபத்தும் இல்லை என்று அறிவியல் வல்லுனர்கள் தெரிவித்தனர்.
உலகின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு நிகழ்ந்த சந்திரகிரகணம் பல அற்புதமான காட்சிகளை கண்முன்னே நிறுத்தியது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் சந்திர கிரகணம் பூரணமாக தெரிந்தது.
ஆஸ்திரேலிய நாட்டில் செந்நிற ரத்த நிலா வானத்தில் ஒளிவீசியது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இதனைக் காண பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருந்தனர்.
கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் உள்ளிட்ட இடங்களிலும் நேற்று சந்திரகிரகணம் காட்சியளித்தது. கிரேக்க நாட்டின் கேப் சௌனியன் பகுதியில் பழைமை வாய்ந்த ஆலயத்தின் மீதும் அங்குள்ள மலைகள் மீதும் கிரகணத்தால் பிடிக்கப்பட்ட நிலவு காட்சியளித்தது