திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டது. ஒரு மணி அளவில், கோபாலபுரம் இல்லத்தில் இருந்து கருணாநிதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கோபாலபுரம் இல்லத்தில் இருந்தும், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு குவிந்தனர். இதையடுத்து ஏராளமானோர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

காவேரி மருத்துவமனையின் நான்காவது தளத்தில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதிக்கு உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் ஆபத்தான கட்டத்தை கடந்துவிட்டதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதிகாலை 2.30 மணிக்கு காவேரி மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கருணாநிதிக்கு ரத்த அழுத்தத்தில் குறைபாடு இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் ரத்த அழுத்தம் சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவ வல்லுனர்களின் கண்காணிப்பில் கருணாநிதிக்கு சிகிச்சையளிக்கப்படுவதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அழகிரி, ராஜாத்திஅம்மாள், கனிமொழி, உள்ளிட்டோர் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *