இந்தியாவிலேயே கல்வித் துறையில் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், மற்றும் அமைச்சர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஆறு ஆண்டுகளில் 1 லட்சத்து 20 ஆயிரம் சுகாதார பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மின்வெட்டே இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்வதாகவும் கல்வித்துறையில் மற்ற மாநிலங்களை விட சிறந்து விளங்குவதாகவும் அவர் தெரிவித்தார். பழனியில் புதிய சித்த மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவித்த முதலமைச்சர், குஜிலியம்பாறையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுக்கா உருவாக்கப்படும் என்றும் கூறினார்.
பின்னர் இவ்விழாவில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நாட்டில் எல்லோரும் எம்.ஜி.ஆரைப் போல் முதலமைச்சராகி விட முடியாது என்றும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பாதையில் அதிமுக மேலும் பல வெற்றிகளை குவிக்கும் என்றும் கூறினார்.