ஆர்கே நகர் தொகுதியில் தமது மனு நிராகரிப்பு குறித்து பிரதமர் மோடிக்கும் குடியரசு தலைவருக்கும் தமது டுவீட்டர் மூலம் புகார் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட விஷால் வேட்புமனு தாக்கல் செய்தார். இதனை பரிசீலனை செய்த அதிகாரிகள், முன்மொழிந்த 2 பேர் வேட்புமனுவில் உள்ளது தங்களது கையெழுத்து இல்லை என நேரில் விளக்கமளித்ததால் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து விஷால் தண்டையார்பேட்டை அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டார். பின்னர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் வேண்டுகோள் விடுத்தவுடன் விஷாலின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அதிகாரி அறிவித்தார். ஆனால் விஷால் வீடு திரும்பியதும் அவரது வேட்புமனுவை நிராகரித்ததாக அதிகாரி அறிவித்துவிட்டார். இதனை கண்டித்து குடியரசு தலைவர் ராம் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு விஷால் டுவிட்டரில் தனது வேட்பு மனு நிராகரிப்பு குறித்து புகார் தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகர் விஷால் இந்திய தேர்தல் ஆணையத்திலும் மனு தாக்கல் செய்துள்ளார். பின்னர் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ்லக்கானியை சந்தித்து புகார் அளித்தார்.